|
நீண்ட தூரப் பயணம்
எப்பொழுதும் என்னுடைய
உதவிக்காக
இயன்றதெல்லாம் செய்துவரும்
என் உள்ளத்தை
ஒப்பற்ற விடுதலையைப்
பெற்ற நாட்டின்
ஊர்ப்பக்கம் உலவிவர
அனுப்பி வைத்தேன்!
திரும்பிவந்து சொன்னசில
செய்தி தன்னைச்
சித்திரமாய்த் தீட்டுவதற்கு
முனைந்து விட்டேன்
கரும்புதின்னக் கூலியுண்டோ?
என்றன் கைகள்களிப்புடனே
ஒப்பினகாண்!
எழுதி விட்டேன்!
“காலையிலே துயர்வந்து
கதவைத் தட்டும்;
கார்இருளை எதிர்பார்த்து
ஜீவன் ஏங்கும்
பாலைவனக் கொடுமையுண்டோ
அங்கே? என்றேன்,
பரிகாச மாய்ச் சிரித்து
நெஞ்சு சொல்லும்:
“காலையெலாம் மதுவாக
இனிக்கு மையா,
கவியெழுதத் தோணுமையா
மகிழ்ச்சி யாலே
சோலைமலர்க் கூட்டம்போல்
மக்கள் கூட்டம்
ஜோதிநிறக் குழந்தைகளாய்த்
தோன்று மையா!
|