பக்கம் எண் :

50தமிழ்ஒளி கவிதைகள்2

கடும்வெய்யில், வசந்தமெனக் 
       குளிர்ச்சி வீசும்;
கவினார்ந்த கலைகளெலாம் 
       வீடு வீடாய்க்
குடும்பங்கள் நடத்துகின்ற 
       காட்சி கண்டேன்
குருவியைப் போல் ஊரூராய்ப் 
       பறந்து சென்றேன்!

வயற்புறத்தே செல்லுங்கால் 
       உழவன் என்போன்
வாகான தோளுடையான் 
       நிமிர்ந்து நின்று
நயமான கவிபொழிந்தான்; 
       பழைய நாளில்
நடந்திட்ட கொடுமைகளைப் 
       பாட்டாய்ச் சொன்னான்

ஆளுக்குப் பாதியெனத் 
       தானியத்தை
அள்ளிப்போய் நிலப்பிரபு 
       வைத்துக் கொண்டு
வாளுக்குப் பலியிட்டான் 
       என்றன் வாழ்வை!
வறுமையதன் நிழல்கூட 
       இப்போதில்லை!

நிலமெலாம் என்னுடைமை; 
       இல்லை, யில்லை!
நேயமிகும் என்நாட்டார் 
       உடைமை; மக்கள்
குலமெல்லாம் வாழ்ந்திடவே
       நான் வாழ்கின்றேன்
குருவியே உன்னைப்போல் 
       என்று சொன்னான்!