கருங்கடல்
ஊஞ்சல் போல முன்னும் பின்னும்
கருங்கடலே - நீயும்
ஓடி ஓடி வந்து போவாய்
பெருங்கடலே.
நீல வர்ண மேகந் தானோ
கருங்கடலே - இங்கே
நிழலை உன்மேல் வீசி யதோ
பெருங்கடலே ?
கரையில் மண்ணை நீயே சேர்த்தாய்
கருங்கடலே - அதனைக்
கடந்து செல்ல முயல்வ தேனோ
பெருங்கடலே ?
உப்புத் தந்தே உணர்வ ளிக்கும்
கருங்கடலே - நாங்கள்
உன்னை யென்றும் மறந்தி டோமே
பெருங்கடலே.
|