பக்கம் எண் :

மலரும் உள்ளம்121

செல்வச் சிறுமியும்
ஏழைச் சிறுமியும்

செல்வச் சிறுமி :

பொம்மைக்குப் பட்டாடை கட்டிடுவேன்.
    பொன்னாலே நகைகளும் போட்டிடுவேன்.
அம்மாவோ அன்புடன் பட்சணங்கள்
    அடிக்கடி தந்திடத் தின்றிடுவேன்.
காரிலே பள்ளிக்கும் சென்றிடுவேன்.
    காலால் நடந்துமே நானறியேன்.
ஜோரான காட்சிகள் கண்டிடுவேன்.
    சொகுசாக என்றுமே வாழ்ந்திடுவேன்.


ஏழைச் சிறுமி :

நாயினும் கேடாய் அலைந்துவிட்டேன்.
    நடுங்கிக் குளிரில் ஒடுங்கிவிட்டேன்.
ஆயிரம் ஓட்டை இருந்திடினும்
    அணிந்திட ஒருதுணி போதுமய்யா.
ஊரெலாம் பல்லைநான் காட்டிவிட்டேன்.
    ஒருபிடி அன்னமும் போடவில்லை.
யாரும் இரங்கிட வில்லையய்யா.
    இப்போதே சாகவும் சித்தமய்யா!