வேடிக்கைப் பாடல்கள்
ஒட்டைச்சிவிங்கி
நெட்டை யான கால்களும்,
நீண்ட கழுத்தும் உடையதாம்.
ஒட்டைச் சிவிங்கி ஒன்றுதான்
உலகில் எனக்குப் பிடித்தது!
ஆனை, குதிரை மீதிலே
அரசர் பவனி வருகிறார்.
நானும் ஒட்டைச் சிவிங்கிமேல்
நன்கு ஏறிச் சுற்றுவேன்!
பழுத்த பழத்தை மரத்திலே
பார்த்து விட்டால், சிவிங்கியின்
கழுத்தில் உடனே ஏறுவேன்;
கையை நீட்டிப் பிடுங்குவேன்!
நீண்ட பாலம் அமைக்கலாம்,
நெட்டை யான கழுத்தினால்!
தாண்டிச் செல்வேன் ஓடையை,
தயக்கம் எதுவும் இன்றியே!
|