மூக்கும் மணமும்
பூக்கள் விற்கும் கடையருகே
போனேன். உடனே அடடாவோ!
மூக்கில் வாசனை புகுந்ததுவே,
முகத்தில் இன்பம் பொங்கியதே.
"பத்து விரல்கள் படைத்ததுபோல்
பற்பல மூக்கைப் படைத்திருந்தால்
இத்தனை மணமும் மூக்கினுள்ளே
இழுத்திட லாமே" என நினைத்தேன்.
*
சாக்கடை தங்கிய வீதியிலே
சற்றே ஒருநாள் நடந்திடவே
மூக்கைத் துளைத்தது, துர்நாற்றம்.
முகமும் சுருங்கிப் போனதுவே!
"மூக்கே இல்லா திருந்திட்டால்,
மிகமிக நல்லது" என்றெண்ணி
மூக்கைப் பிடித்துக் கொண்டேநான்
மும்முர மாக நடந்தேனே!
|