கண்ணா
விழித்திடு
காலை நேரம் ஆனதே.
கண்ணா, கண்ணை விழித்திடு !
வேலை செய்ய யாவரும்
விழித்தெ ழுந்தார், பார்த்திடு.
எழுவ தற்கே "கொக்கரோ"
என்று சேவல் கூவுதே.
உழுவ தற்கே மாடுகள்
ஓட்டி உழவர் செல்கிறார்.
மறைந்து இருளும் ஓடவே,
மலர்கள் யாவும் விரியவே,
விரைந்து வந்தான், சூரியன்.
விழித்தெ ழுந்து பார்த்திடு.
பசுமை யான புல்லிலே
பனிம றைந்து போனதே.
பசுவும் கன்று தடவியே
பாலை ஊட்டல் பார்த்திடு.
|