|
பாரத மாதா
தான தனதந்தன
தான தனந்தன
தானனத் தானா னே.
|
முன்னை இலங்கை அரக்கர்
அழிய
முடித்தவில் யாருடைவில்? -- எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவிநல்
ஆரிய ராணியின் வில்.
|
1
|
இந்திர சித்தன்
இரண்டு துண்டாக
எடுத்தவில் யாருடைவில்? -- எங்கள்
மந்திரத் தெய்வதம் பாரதராணி
வயிரவி தன்னுடை வில்.
|
2
|
ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகின்பக் கேளியென்றே -- மிக
நன்றுபல் வேதம் வரைந்தகை பாரத
நாயகி தன்திருக் கை.
|
3
|
சித்த மயமிவ் வுலகம் உறுதிநம்
சித்தத்தில் ஓங்கிவிட்டால் -- துன்பம்
அத்தனையும் வெல்ல லாமென்று சொன்னசொல்
ஆரிய ராணியின் சொல். |
4
|
சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத்
தட்டி விளையாடி -- நன்று
உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி
ஒளியுறப் பெற்ற பிள்ளை.
|
5
|
காண்டிவம் ஏந்தி உலகினை
வென்றது
கல்லொத்த தோள் எவர்தோள்? -- எம்மை
ஆண்டருள் செய்பவள், பெற்று வளர்ப்பவள்
ஆரிய தேவியின் தோள்.
|
6
|
சாகும் பொழுதில் இருசெவிக்
குண்டலம்
தந்த தெவர் கொடைக் கை? -- சுவைப்
பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்
பாரத ராணியின் கை.
|
7
|
போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை
புகன்ற தெவருடை வாய்? -- பகை
தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத
தேவி மலர்த்திரு வாய்.
|
8
|
தந்தை இனிதுறந் தான் அரசாட்சியும்
தையலர் தம்முறவும் -- இனி
இந்த உலகில் விரும்பு கிலேன் என்றது
அம்எனை செய்தஉள்ளம்.
|
9
|
அன்பு சிவம் உல கத்துயர்
யாவையும்
அன்பினிற் போகும் என்றே -- இங்கு
முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்
மொழிஎங்கள் அன்னை மொழி.
|
10
|
மிதிலை எரிந்திட வேதப்
பொருளை
வினவும் சனகன் மதி -- தன்
மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது
வல்லநம் அன்னை மதி.
|
11
|
தெய்விகச் சாகுந் தலமெனும்
நாடகம்
செய்த தெவர் கவிதை? -- அயன்
செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத
தேவி அருட்கவிதை. |
12 |