பக்கம் எண் :

தேசிய கீதங்கள்


பாரத நாடு

பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி்

பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்
       புன்மை யிருட்கணம் போயின யாவும்
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
       எழுந்து விளங்கிய அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்
       தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்.
விழிதுயில் கின்றனை இன்னும் எம் தாயே!
       வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே!

1

புள்ளினம் ஆர்த்தன; ஆர்த்தன முரசம்;
       பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்;
வெள்ளிய சங்கம் முழங்கின கேளாய்!
       வீதியெ லாம் அணு குற்றனர் மாதர்;
தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்
       சீர்த்திரு நாமமும் ஓதிநிற் கின்றார்;
அள்ளிய தெள்ளமு தன்னைஎம் அன்னை!
       ஆருயிரே! பள்ளி யெழுந்தரு ளாயே!

2

பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்;
       பார்மிசை நின்னொளி காணுதற்கு
அலந்தோம்; கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே
       கனிவுறு நெஞ்சக மலர்கொடு
வந்தோம்; சுருதிகள் பயந்தனை; சாத்திரம் கோடி
       சொல்லரு மாண்பின ஈன்றனை
அம்மே! நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்!
       நிர்மலையே பள்ளி யெழுந்தரு ளாயே!

3

நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
       நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ;
பொன்னனை யாய்! வெண் பனிமுடி யிமயப்
       பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!
என்ன தவங்கள்செயது எத்தனை காலம்
       ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே?
இன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ?
       இன்னுயிரே! பள்ளி யெழுந்தரு ளாயே!

4
\பு{[பாட பேதம்]: ‘பொங்கின தெங்குஞ்
‘ஆல்லிதெள்ள முதன்னையெ மன்னை’
‘பரிதியின் பேரொளி’
-- 1910ஆம் வருடப் பதிப்பு}

மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?
       மாநிலம் பெற்றவள் இஃதுணராயோ?
குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?
       கோமகளே! -- பெரும் பாரதர்க் கரசே!
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
       வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்
இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்!
       ஈன்றவளே! பள்ளி யெழுந்தரு ளாயே!
5