பாரத நாடு
|
பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
|
நொண்டிச்சிந்து
|
நெஞ்சு பொறுக்கு திலையே -- இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
அஞ்சி யஞ்சிச் சாவார் -- இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் -- இந்த
மரத்தில் என் பார்; அந்தக் குளத்தில் என்பார்,
துஞ்சுது முகட்டில் என்பார் -- மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார். |
(நெஞ்சு)
|
1 |
மந்திர வாதிஎன்பார் -- சொன்ன
மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்;
யந்திர சூனியங்கள் -- இன்னும்
எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே -- ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்
அந்த அரசியலை -- இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார்
|
(நெஞ்சு)
|
2 |
சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் -- ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்
துப்பாக்கி கொண்டு ஒருவன் -- வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்
அப்பால் எவனோசெல்வான் -- அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற்பார்
எப்போதும் கைகட்டுவார் -- இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார். |
(நெஞ்சு)
|
3 |
நெஞ்சு பொறுக்கு திலையே -- இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் -- ஒரு
கோடிஎன்றால் அது பெரிதாமோ?
ஐந்துதலைப் பாம்பென்பான் -- அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார் -- பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.
|
(நெஞ்சு)
|
4 |
சாத்திரங்கள் ஒன்றுங்காணார் -- பொய்ச்)
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றாயிருந்தாலும் -- ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்;
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் -- தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவர்;
ஆத்திரங் கொண்டே இவன்சைவன் -- இவன்
அரிபக்தன் என்று பெருஞ் சண்டையிடுவார்.
|
(நெஞ்சு)
|
5 |
நெஞ்சு பொறுக்கு திலையே -- இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே
கஞ்சி குடிப்பதற்கிலார் -- அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே -- நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின்றாரே -- இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே.
|
(நெஞ்சு)
|
6 |
எண்ணிலா நோயுடையார் -- இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தைகள் போல் -- பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் -- பத்து
நாலா யிரங்கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே -- இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்.
|
(நெஞ்சு)
|
7 |