பக்கம் எண் :

தேசிய கீதங்கள்


பாரத நாடு

பாரத சமுதாயம்

[ராகம் -- பியாக்] [தாளம் -- திஸ்ர ஏகதாளம்]


பல்லவி

பாரத சமுதாயம் வாழ்கவே -- வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே -- ஜய ஜய ஜய





(பாரத)


அனுபல்லவி

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பி லாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை -- வாழ்க

சரணங்கள்

 

 

(பாரத)


மனித ருணவை மனிதர் பறிக்கும்
     வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
     வாழ்க்கை இனியுண்டோ? -- புலனில்
     வாழ்க்கை இனியுண்டோ? -- நம்மி லந்த
     வாழ்க்கை இனியுண்டோ?
     இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
     எண்ணரும் பெருநாடு
     கனியும் கிழங்கும் தானியங்களும்
     கணக்கின்றித் தரு நாடு -- இது
     கணக்கின்றித் தரு நாடு -- நித்தம் நித்தம்      கணக்கின்றித் தரு நாடு -- வாழ்க
(பாரத) 1

இனியொரு விதி செய்வோம் -- அதை
எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம் -- வாழ்க
(பாரத) 2

“எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்”
     என்றுரைத்தான் கண்ண பெருமான்;
எல்லாரும் மரநிலை எய்தும் நன்முறையை
     இந்தியா உலகிற் களிக்கும் -- ஆம்
     இந்தியா உலகிற் களிக்கும் -- ஆம் ஆம்
     இந்தியா உலகிற் களிக்கும் -- வாழ்க
(பாரத) 3

எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் -- நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் -- ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க
(பாரத) 4