பக்கம் எண் :

தேசிய கீதங்கள்

பாரத நாடு

ஜாதீய கீதம்-1

               பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் எழுதிய
               ஜகத் பிரசித்தி கொண்ட ‘வந்தே மாதரம்’ கீதத்தின்

மொழிபெயர்ப்பு

இனியநீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை!
(வந்தே) 1

வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர்மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம் வரம்பல நல்குவை!

(வந்தே) 2

முப்பது கோடிவாய் (நின்னிசை) முழங்கவும்
அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும்
‘திறனிலாள்’ என்றுனை யாவனே செப்புவன்?
அருந்திற லுடையாய்! அருளினைப் போற்றி
பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை

(வந்தே) 3

\பு{[குறிப்பு]: வங்காளி பாஷையிலே ஏழு கோடியென்றே கூறி யிருக்கின்றது. ஆனால், அது வங்காளத்தை மட்டிலுமே குறிப்பிட்டது. 30 கோடி இந்தியா முழுமையின் ஜனத்தொகை.
-- 1937 ஆம் வருடப் பதிப்பு.}

நீயே வித்தை, நீயே தருமம்!
நீயே இதயம், நீயே மருமம்!
உடலகத் திருக்கும் உயிருமன் நீயே!

(வந்தே) 4

தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே!
சித்த நீங்காதுறு பக்தியும் நீயே
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவியிங் குனதே!

(வந்தே) 5

ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலைநீ!
வித்தைநன் கருளும் வெண்மலர்த் தேவி நீ!

(வந்தே) 6

போற்றிவான் செல்வீ, புரையிலை, நிகரிலை!
இனியனீர்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை!
சாமள நிறத்தினை, சரளமாந் தகையினை!
இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை!
தரித்தெமைக் காப்பாய், தாயே! போற்றி!
(வந்தே) 7