|
|
செந்தமிழ் நாடெனும் போதினிலே -- இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே -- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே -- ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே -- |
(செந்தமிழ்)
|
1 |
வேதம் நிறைந்த தமிழ்நாடு -- உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு -- நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல்இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு |
(செந்தமிழ்)
|
2 |
காவிரி தென்பெண்ணை பாலாறு
-- தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி -- என
மேவிய யாறு பலவோடத் -- திரு
மேனி செழித்த தமிழ்நாடு. |
(செந்தமிழ்)
|
3 |
முத்தமிழ் மாமுனி நீள்வரையே
-- நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு -- செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே -- அவை
யாவும் படைத்த தமிழ்நாடு |
(செந்தமிழ்)
|
4 |
நீலத் திரைக்கட லோரத்திலே -- நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -- வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு. |
(செந்தமிழ்)
|
5 |
கல்வி சிறந்த தமிழ்நாடு --
புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு -- நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு. |
(செந்தமிழ்)
|
6 |
வள்ளுவன் தன்னை உலகினுக்கே
-- தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு -- நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி
யாரம் படைத்த தமிழ்நாடு. |
(செந்தமிழ்)
|
7 |
சிங்களம் புட்பகம் சாவக --
மாகிய
தீவு பலவினுஞ் சென்றேறி -- அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு. |
(செந்தமிழ்)
|
8 |
விண்ணை யிடிக்கும் தலையிமயம்
-- எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் -- சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு. |
(செந்தமிழ்)
|
9 |
சீன மிசிரம் யவனரகம் -- இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் -- கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு. |
(செந்தமிழ்)
|
10 |