பக்கம் எண் :

தேசிய கீதங்கள்

தமிழ் நாடு

செந்தமிழ் நாடு


செந்தமிழ் நாடெனும் போதினிலே -- இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே -- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே -- ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே --
(செந்தமிழ்) 1

வேதம் நிறைந்த தமிழ்நாடு -- உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு -- நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல்இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு
(செந்தமிழ்) 2

காவிரி தென்பெண்ணை பாலாறு -- தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி -- என
மேவிய யாறு பலவோடத் -- திரு
மேனி செழித்த தமிழ்நாடு.
(செந்தமிழ்) 3

முத்தமிழ் மாமுனி நீள்வரையே -- நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு -- செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே -- அவை
யாவும் படைத்த தமிழ்நாடு
(செந்தமிழ்) 4

நீலத் திரைக்கட லோரத்திலே -- நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -- வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு.
(செந்தமிழ்) 5

கல்வி சிறந்த தமிழ்நாடு -- புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு -- நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு.
(செந்தமிழ்) 6

வள்ளுவன் தன்னை உலகினுக்கே -- தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு -- நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி
யாரம் படைத்த தமிழ்நாடு.
(செந்தமிழ்) 7

சிங்களம் புட்பகம் சாவக -- மாகிய
தீவு பலவினுஞ் சென்றேறி -- அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு.
(செந்தமிழ்) 8

விண்ணை யிடிக்கும் தலையிமயம் -- எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் -- சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.
(செந்தமிழ்) 9

சீன மிசிரம் யவனரகம் -- இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் -- கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு.
(செந்தமிழ்) 10