பக்கம் எண் :

தேசிய கீதங்கள்

சுதந்திரப் பள்ளு

பள்ளர் களியாட்டம்

[ராகம் -- வராளி] [தாளம் -- ஆதி]

பல்லவி

ஆடுவோமே -- பள்ளுப் பாடுவோமே;
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று

சரணங்கள்

பார்ப்பானை ஐயரென்ற
  காலமும்போச்சே -- வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற
  காலமும்போச்சே -- பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற
  காலமும்போச்சே -- நம்மை
ஏய்ப்போருக் கேவல் செய்யும்
  காலமும்போச்சே.
(ஆடுவோமே) 1

எங்கும் சுதந்திரம்
  என்பதேபேச்சு -- நாம்
எல்லோரும் சமமென்ப
  துஉறுதியாச்சு
சங்குகொண் டேவெற்றி
  ஊதுவோமே -- இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து
  ஓதுவோமே.
(ஆடுவோமே) 2

எல்லோரும் ஒன்றென்னும்
  காலம்வந்ததே -- பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற
  காலம்வந்ததே -- இனி
நல்லோர் பெரியரென்னும்
  காலம்வந்ததே -- கெட்ட
நயவஞ்சக் காரருக்கு
  நாசம்வந்ததே.
(ஆடுவோமே) 3

உழவுக்கும் தொழிலுக்கும்
  வந்தனைசெய்வோம் -- வீணில்
உண்டுகளித் திருப்போரை
  நிந்தனைசெய்வோம்
விழலுக்கு நீர்ப் பாய்ச்சி
  மாயமாட்டோம் -- வெறும்
வீணருக்கு உழைத்துடலம்
  ஓயமாட்டோம்.
(ஆடுவோமே) 4

நாமிருக்கும் நாடுநமது
  என்பதறிந்தோம் -- இது
நமக்கே உரிமையாம்
  என்பதறிந்தோம் -- இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி
  அடிமைசெய்யோம் -- பரி
பூரணனுக் கேயடிமை
  செய்து வாழ்வோம்.
(ஆடுவோமே) 5