பிற
நாடுகள்
மாஜினியின் பிரதிக்கினை
|
[மாஜினி என்ற இத்தாலி தேசத்து தேசபிமானி
தம்மால் ஸ்தாபிக்கப்பட்ட ‘யௌவன இத்தாலி’ என்ற சங்கத்திலே செய்துகொண்ட பிரதிக்கினை.]
பேரருட் கடவுள் திருவடி யாணை,
பிறப்பளித் தெமையெலாம் புரக்கும்
தாரணி விளக்காம் என்னரு நாட்டின்
தவப்பெய ரதன்மிசை யாணை
பாரவெந் துயர்கள் தாய்த்திரு நாட்டின்
பணிக்கெனப் பல்விதத் துழன்ற
வீரர் நம் நாடு வாழ்கென வீழ்ந்த
விழுமியோர் திருப்பெய ராணை.
|
1 |
ஈசனிங் கெனக்கு மென்னுடன் பிறந்தோர்
யாவர்க்கு மியற்கையி னளித்த
தேசமின் புறுவான் எனக்கவன் பணித்த
சீருய ரறங்களி னாணை.
மாசறு மென்நற் றாயினைப் பயந்தென்
வழிக்கெலாம் உறையுளாம் நாட்டின்
ஆசையிங் கெவர்க்கும் இயற்கையா மன்றோ?
அத்தகை யன்பின்மீ தாணை. |
2 |
தீயன புரிதல், முறைதவி ருடைமை,
செம்மைதீர் அரசியல், அநீதி
ஆயவற் றென்னெஞ் சியற்கையின் எய்தும்
அரும்பகை யதன்மிசை யாணை.
தேயமொன் றற்றேன், நற்குடிக் குரிய
உரிமைகள் சிறிதெனு மில்லேன்,
தூயசீ ருடைத்தாம் சுதந்திரத் துவசம்
துளங்கிலா நாட்டிடைப் பிறந்தேன். |
3 |
மற்றைநாட் டவர்முன் நின்றிடும் போழ்து
மண்டுமென் வெட்கத்தி னாணை.
முற்றியவீடு பெறற்கெனப் படைப்புற்று
அச்செயல் முடித்திட வலிமை
அற்றதா மறுகும் என்னுயிர்க் கதனில்
ஆர்ந்தபே ராவலி னாணை.
நற்றவம் புரியப் பிறந்ததா யினுமிந்
நலனறு மடிமையின் குணத்தால் |
4 |
வலியிழந் திருக்கும் என்னுயிர்க் கதன்கண்
வளர்ந்திடும் ஆசைமீ தாணை.
மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர்
மாண்பதன் நினைவின்மீ தாணை.
மெலிவுடன் இந்நாள் யாங்கள்
வீழ்ந்திருக்கும் வீழ்ச்சியி னுணர்ச்சிமீ தாணை.
பொலிவுறு புதல்வர் தூக்கினி லிறந்தும்
புன்சிறைக் களத்திடை யழிந்தும் |
5 |
வேற்றுநா டுகளில் அவர்துரத் துண்டும்
மெய்குலைந் திறந்துமே படுதல்
ஆற்ற கிலராய் எம்மரு நாட்டின்
அன்னைமார் அழுங்கணீ ராணை.
மாற்றல ரெங்கள் கோடியர்க் கிழைக்கும்
வகுக்கொணாத் துயர்களி னாணை.
ஏற்றஇவ் வாணை யனைத்துமேற் கொண்டே
யான்செயுஞ் சபதங்கள் இவையே. |
6 |
கடவுளிந் நாட்டிற் கீந்ததோர் புனிதக்
கட்டளை தன்னினும், அதனைத்
திடனுற நிறுவ முயலுதல் மற்றித்
தேசத்தே பிறந்தவர்க் கெல்லாம்
உடனுறு கடமை யாகுமென் பதினும்
ஊன்றிய நம்புதல் கொண்டும்,
தடநில மிசையோர் சாதியை இறைவன்
சமைகெனப் பணிப்பனேல் அதுதான் |
7 |
{[பாட
பேதம்]: ‘துரத்துண்டு’ -- ஸ்வதேச கீதங்கள்.}
|
|
|
சமைதலுக் குரிய திறமையும் அதற்குத்
தந்துள னென்பதை யறிந்தும்,
அமையுமத் திறமை ஜனங்களைச் சாரும்
அன்னவர் தமக்கெனத் தாமே
தமையல தெவர்கள் துணையு மில்லாது
தம்மருந் திறமையைச் செலுத்தல்
சுமையெனப் பொறுப்பின் செயத்தினுக்கதுவே
சூழ்ச்சியாம் என்பதை யறிந்தும், |
8 |
கருமமுஞ் சொந்த நலத்தினைச் சிறிதும்
கருதிடா தளித்தலுந் தானே
தருமமாம் என்றும், ஒற்றுமையோடு
தளர்விலாச் சிந்தனை கொளலே
பெருமைகொள் வலியா என்றுமே மனத்திற்
பெயர்ந்திடா உறுதிமேற் கொண்டும்,
அருமைசால் சபத மிவைபுரி கின்றேன்
ஆணைக ளனைத்துமுற் கொண்டே. |
9 |
என்னுட னொத்த தருமத்தை யேற்றாா
இயைந்தஇவ்‘வாலிபர் சபை’க்கே
தன்னுடல், பொருளும், ஆவியு மெல்லாம்
தத்தமா வழங்கினேன். எங்கள்
பொன்னுயர் நாட்டை ஒற்றுமை யுடைத்தாய்ச்
சுதந்திரம் பூண்டது வாகி
இன்னுமொர் நாட்டின் சார்வில தாகிக்
குடியர சியன்றதா யிலக. |
10 |
இவருடன் யானும் இணங்கியே யென்றும்
இதுவலாற் பிறதொழி லிலனாய்த்
தவறறு முயற்சி செய்திடக் கடவேன்.
சந்ததஞ் சொல்லினால், எழுத்தால்,
அவமறு செய்கை யதனினால், இயலும்
அளவெலாம், எம்மவரிந்த
நவமுறு சபையி னொருபெருங் கருத்தை
நன்கிதன் அறிந்திடப் புரிவேன். |
11 |
உயருமிந் நோக்க நிறைவுற ‘இணக்கம்’
ஒன்றுதான் மார்க்கமென் பதுவும்,
செயம்நிலை யாகச் செய்திடற் கறமே
சிறந்ததோர் மார்க்கமென் பதுவும்,
பெயர்வற எங்கள் நாட்டினர் மனதிற்
பேணுமா றியற்றிடக் கடவேன்;
அயலொரு சபையி லின்றுதோ றென்றும்
அமைந்திடா திருந்திடக் கடவேன். |
12 |
எங்கள்நாட் டொருமை என்னொடுங் குறிக்கும்
இச்சபைத் தலைவரா யிருப்போர்
தங்களாக் கினைக ளனைத்தையும் பணிந்து
தலைக்கொளற் கென்றுமே கடவேன்;
இங்கென தாவி மாய்ந்திடு மேனும்
இவர்பணி வெளியிடா திருப்பேன்;
துங்கமார் செயலாற் போதனை யாலும்
இயன்றிடுந் துணையிவர்க் களிப்பேன். |
13 |
இன்றும்எந் நாளும் இவைசெயத் தவறேன்;
மெய்யிது, மெய்யிது; இவற்றை
என்றுமே தவறி யிழைப்பனேல் என்னை
ஈசனார் நாசமே புரிக;
அன்றியும் மக்கள் வெறுத்தெனை இகழ்க;
அசத்தியப் பாதகஞ் சூழ்க;
நின்றதீ யெழுவாய் நரகத்தின் வீழ்ந்து
நித்தம்யா னுழலுக மன்னோ! |
14 |
வேறு
|
பேசி நின்ற பெரும்பிர திக்கினை
மாசிலாது நிறைவுறும் வண்ணமே
ஆசி கூறி யருளுக ஏழையேற்கு
ஈசன் என்று இதயத் திலகியே.
|
15 |