பிற
நாடுகள்
புதிய ருஷியா
ஜார் சக்ரவர்த்தியின் வீழ்ச்சி
|
மாகாளி பராசக்தி உருசியநாட்
டினிற் கடைக்கண் வைத்தாள் அங்கே
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி;
கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்;
வாகான தோள்புடைத்தார் வானமரர்;
பேய்களெலாம் வருந்திக் கண்ணீர்
போகாமற் கண்புகைந்து மடிந்தனவாம்;
வையகத்தீர், புதுமை காணீர்! |
1 |
இரணியன்போ லரசாண்டான் கொடுங்கோலன்
ஜாரெனும்பேரிசைந்த பாவி.
சரணின்றித் தவித்திட்டார் நல்லோரும்
சான்றோரும்; தருமந் தன்னைத்
திரணமெனக் கருதிவிட்டான் ஜார்மூடன்;
பொய் சூது தீமையெல்லாம்
அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்துவளர்ந்
தோங்கினவே அந்த நாட்டில். |
2 |
உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை;
பிணிகள்பல வுண்டு; பொய்யைத்
தொழுதடிமை செய்வார்க்குச் செல்வங்க
ளுண்டு உண்மை சொல்வோர்க் கெல்லாம்
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு
தூக்குண்டே யிறப்ப துண்டு;
முழுதுமொரு பேய்வனமாஞ் சிவேரியிலே
ஆவிகெட முடிவ துண்டு. |
3 |
இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால்
வனவாசம்; இவ்வா றங்கே
செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே
அறமாகித் தீர்ந்த போதில்,
அம்மைமனங் கனிந்திட்டாள்; அடிபரவி
உண்மைசொலும் அடியார் தம்மை
மும்மையிலும் காத்திடுநல் விழியாலே
நோக்கினாள்; முடிந்தான் காலன். |
4 |
இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்துவிட்டான்
ஜாரரசன்; இவனைச் சூழ்ந்து
சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி
அறங்கொன்று சதிகள் செய்த
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்,
புயற்காற்றுச் சூறை தன்னில்
திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம்
விறகான செய்தி போலே.
|
5 |
குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றி லெழுந்ததுபார்; குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார்;
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக! என்றார்;
இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான்,
கிருதயுகம் எழுக மாதோ! |
6 |