கண்ணன் பாட்டு
கண்ணன் -- என் காதலன்
காட்டிலே தேடுதல்
(ஹிந்துஸ்தானி தோடி-ஆதி தாளம்.
ரசங்கள்: பயாநகம், அற்புதம்.)
|
திக்குத் தெரியாத காட்டில் -- உனைத்
தேடித் தேடி இளைத்தேனே. |
மிக்க நலமுடைய மரங்கள், -- பல
விந்தைச் சுவையுடைய கனிகள், -- எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள், -- அங்கு
பாடி நகர்ந்துவரு நதிகள், -- ஒரு
|
(திக்குத்) |
1 |
நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள், -- எங்கும்
நீளக் கிடக்குமிலைக் கடல்கள், -- மதி
வஞ்சித் திடுமகழிச் சுனைகள், -- முட்கள்
மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள், -- ஒரு
|
(திக்குத்) |
2 |
ஆசை பெறவிழிக்கும் மான்கள், -- உள்ளம்
அஞ்சக் குரல்பழகும் புலிகள், -- நல்ல
நேசக் கவிதைசொல்லும் பறவை, -- அங்கு
நீண்டே படுத்திருக்கும் பாம்பு, -- ஒரு
|
(திக்குத்) |
3 |
தன்னிச்சை கொண்டலையும் சிங்கம் -- அதன்
சத்தத்தினிற் கலங்கும் யானை -- அதன்
முன்னின் றோடுமிள மான்கள் -- இவை
முட்டா தயல்பதுங்குத் தவளை -- ஒரு
|
(திக்குத்) |
4 |
கால்கை சோர்ந்துவிழ லானேன் -- இரு
கண்ணுந் துயில்படர லானேன் -- ஒரு
வேல்கைக் கொண்டுகொலை வேடன் -- உள்ளம்
வெட்கம் கொண்டொழிய விழித்தான் -- ஒரு
|
(திக்குத்) |
5 |
“பெண்ணே, உனதழகைக் கண்டு -- மனம்
பித்தங் கொள்ளு” தென்று நகைத்தான் -- “அடி
கண்ணே, எனதிருகண் மணியே -- உனைக்
கட்டித் தழுவமனம் கொண்டேன்.
|
6 |
சோர்ந்தே படுத்திருக்க லாமோ? -- நல்ல
துண்டக் கறிசமைத்துத் தின்போம் -- சுவை
தேர்ந்தே கனிகள்கொண்டு தருவேன் -- நல்ல
தேங்கள் ளுண்டினிது களிப்போம்.”
|
7 |
என்றே கொடியவிழி வேடன் -- உயிர்
இற்றுப் போகவிழித் துரைத்தான் -- தனி
நின்றே இருகரமுங் குவித்து -- அந்த
நீசன் முன்னர் இவை சொல்வேன்
|
8 |
“அண்ணா, உனதடியில் வீழ்வேன் -- எனை
அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா -- பிறன்
கண்ணாலஞ் செய்துவிட்ட பெண்ணை -- உன்றன்
கண்ணாற் பார்த்திடவுந் தகுமோ?
|
9 |
“ஏடீ, சாத்திரங்கள் வேண்டேன் -- நின
தின்பம் வேண்டுமடி, கனியே! -- நின்றன்
மோடி கிருக்குதடி தலையை, -- நல்ல
மொந்தைப் பழையகள்ளைப் போலே.”
|
10 |
காதா லிந்தவுரை கேட்டேன் -- ‘அட
கண்ணா!’ வென்றலறி வீழ்ந்தேன் -- மிகப்
போதாக வில்லையிதற் குள்ளே -- என்றன்
போதந் தெளியநினைக் கண்டேன். |
11 |
கண்ணா, வேடனெங்கு போனான்? -- உனைக்
கண்டே யலறிவிழுந் தானோ? -- மணி
வண்ணா! எனதபயக் குரலில் -- எனை
வாழ்விக்க வந்த அருள் வாழி! |
12 |