கண்ணன் பாட்டு
கண்ணன் -- என் காதலன்
(ராகம்-பிலஹரி)
பிரிவாற்றாமை
|
ஆசை முகமறந்து போச்சே -- இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் -- எனில்
நினைவு முகமறக்க லாமோ?
|
1
|
கண்ணில்
தெரியுதொரு தோற்றம் -- அதில்
கண்ண னழகு முழுதில்லை;
நண்ணு முகவடிவு காணில் -- அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.
|
2
|
ஓய்வு மொழிதலு
மில்லாமல் -- அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்;
வாயு முரைப்பதுண்டு கண்டாய் -- அந்த
மாயன் புகழினையெப் போதும்.
|
3
|
கண்கள்
புரிந்துவிட்ட பாவம் -- உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினிடத்திலிது போலே -- ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?
|
4
|
தேனை மறந்திருக்கும்
வண்டும் -- ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் -- இந்த
வைய முழுதுமில்லை தோழி.
|
5
|
கண்ணன் முகமறந்து
போனால் -- இந்தக்
கண்க ளிருந்தும் பயனுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் -- இனி
வாழும் வழியென்னடி தோழி? |
6 |