பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்

சகுனி திரிதராட்டிரனிடம் சொல்லுதல்

மற்றதன் பின்னர் இருவரும் -- அரு
மந்திரக் கேள்வி உடையவன் -- பெருங்
கொற்றவர் கோன்திரி தரட்டிரன் -- சபை
கூடி வணங்கி இருந்தனர்; -- அருள்
அற்ற சகுனியும் சொல்லுவான்: -- ‘ஐய,
ஆண்டகை நின்மகன் செய்திகேள்; -- உடல்
வற்றித் துரும்பொத் திருக்கின்றான்; -- உயிர்
வாழ்வை முழுதும் வெறுக்கின்றான்;
58

‘உண்ப சுவையின்றி உண்கின்றான்; -- பின்
உடுப்ப திகழ உடுக்கின்றான்; -- பழ
நண்பர்க ளோடுற வெய்திடான்; -- இள
நாரியரைச் சிந்தை செய்திடான்; -- பிள்ளை
கண்பசலை கொண்டு போயினான்; -- இதன்
காரணம் யாதென்று கேட்பையால்; -- உயர்
திண்பரு மத்தடந் தோளினாய்!’ -- என்று
தீய சகுனியும் செப்பினான்.
59

தந்தையும் இவ்வுரை கேட்டதால் -- உளம்
சாலவும் குன்றி வருந்தியே, -- ‘என்றன்
மைந்த! நினக்கு வருத்தமேன்? -- இவன்
வார்த்தையி லேதும் பொருளுண்டோ? -- நினக்கு
எந்த விதத்துங் குறையுண்டோ? -- நினை
யாரும் எதிர்த்திடு வாருண்டோ? -- நின்றன்
சிந்தையில் எண்ணும் பொருளெலாம் -- கணந்
தேடிக் கொடுப்பவர் இல்லையோ?
60

‘இன்னமு தொத்த உணவுகள், -- அந்த
இந்திரன் வெஃ குறும் ஆடைகள், -- பலர்
சொன்ன பணிசெயும் மன்னவர், -- வருந்
துன்பந் தவிர்க்கும் அமைச்சர்கள், -- மிக
நன்னலங் கொண்ட குடிபடை, -- இந்த
நானில மெங்கும் பெரும்புகழ் -- மிஞ்சி
மன்னும்அப் பாண்டவச் சோதரர் -- இவை
வாய்ந்தும் உனக்குத் துயருண்டோ?’
61

தந்தை வசனஞ் செவியுற்றே -- கொடி
சர்ப்பத்தைக் கொண்டதொர் கோமகன்
வெந்தழல் போலச் சினங்கொண்டே -- தன்னை
மீறிப் பலசொல் விளம்பினான்; -- இவன்

\பு{[மு-ப.]: ‘கொண்ட குடிவகை’}

மந்த மதிகொண்டு சொல்வதை -- அந்த
மாமன் திறித்துரை செய்குவான்: -- ‘ஐய,
சிந்தை வெதுப்பத்தி னாலிவன் -- சொலும்
சீற்ற மொழிகள் பொறுப்பையால்.
62

‘தன்னுளத் துள்ள குறையெலாம் -- நின்றன்
சந்நிதி யிற்சென்று சொல்லிட -- முதல்
என்னைப் பணித்தனன்; யானிவன் -- றனை
இங்கு வலியக் கொணர்ந்திட்டேன்; -- பிள்ளை
நன்னய மேசிந்தை செய்கின்றான்; -- எனில்
நன்கு மொழிவ தறிந்திலன்; -- நெஞ்சைத்
தின்னுங் கொடுந்தழல் கொண்டவர் -- சொல்லுஞ்
செய்தி தெளிய உரைப்பரோ?
63

‘நீபெற்ற புத்திரனே யன்றோ? -- மன்னர்
நீதி யியல்பில் அறிகின்றான்; -- ஒரு
தீபத்தில் சென்று கொளுத்திய -- பந்தம்
தேசு குறைய எரியுமோ? -- செல்வத்
தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல் -- மன்னர்
சாத்திரத் தேமுதற் சூத்திரம்; -- பின்னும்
ஆபத் தரசர்க்கு வேறுண்டோ -- தம்மில்
அன்னியர் செல்வம் மிகுதல்போல்?
64

‘வேள்வியில் அன்றந்தப் பாண்டவர் -- நமை
வேண்டுமட் டுங்குறை செய்தனர்; -- ஒரு
கேள்வி யிலாதுன் மகன்றனைப் -- பலர்
கேலிசெய் தேநகைத் தார், கண்டாய்! -- புவி
ஆள்வினை முன்னவர்க் கின்றியே -- புகழ்
ஆர்ந்திளை யோரது கொள்வதைப் -- பற்றி
வாள்விழி மாதரும் நம்மையே -- கய
மக்களென் றெண்ணி நகைத்திட்டார்.
65

‘ஆயிரம் யானை வலிகொண்டான் -- உந்தன்
ஆண்டகை மைந்த னிவன், கண்டாய்! -- இந்த
மாயிரு ஞாலத் துயர்ந்ததாம் -- மதி
வான்குலத் திற்கு முதல்வனாம்; -- ஒளி
ஞாயிறு நிற்பவும் மின்மினி -- தன்னை
நாடித் தொழுதிடுந் தன்மைபோல், -- அவர்
வேயிருந்தூ துமொர் கண்ணனை -- அந்த
வேள்வியில் சால உயர்த்தினார்.
66

‘ஐயநின் மைந்தனுக் கில்லைகாண் -- அவர்
அர்க்கியம் முற்படத் தந்ததே; -- இந்த
வையகத் தார்வியப் பெய்தவே, -- புவி
மன்னவர் சேர்ந்த சபைதனில் -- மிக
நொய்யதொர் கண்ணனுக் காற்றினார்; -- மன்னர்
நொந்து மனங்குன்றிப் போயினர்; -- பணி
செய்யவும் கேலிகள் கேட்கவும் -- உன்றன்
சேயினை வைத்தனர் பாண்டவர்.
67

‘பாண்டவர் செல்வம் விழைகின்றான்; -- புவிப்
பாரத்தை வேண்டிக் குழைகின்றான்; -- மிக
நீண்ட மகிதலம் முற்றிலும் -- உங்கள்
நேமி செலும்புகழ் கேட்கின்றான்; -- குலம்
பூண்ட பெருமை கெடாதவா -- றெண்ணிப்
பொங்குகின் றான் நலம் வேட்கின்றான்; -- மைந்தன்
ஆண்டகைக் கிஃது தகுமன்றோ? -- இல்லை
யாமெனில் வையம் நகுமன்றோ?
68

‘நித்தங் கடலினிற் கொண்டுபோய் -- நல்ல
நீரை அளவின்றிக் கொட்டுமாம் -- உயர்
வித்தகர் போற்றிடுங் கங்கையா -- றது
வீணிற் பொருளை யழிப்பதோ? -- ஒரு
சத்த மிலாநடுக் காட்டினில் -- புனல்
தங்கிநிற் குங்குளம் ஒன்றுண் டாம்; -- அது
வைத்ததன் நீரைப் பிறர்கொளா -- வகை
வாரடைப் பாசியில் மூடியே.
69

‘சூரிய வெப்பம் படாமலே -- மரம்
சூழ்ந்த மலையடிக் கீழ்ப்பட்டே -- முடை
நீரினை நித்தலும் காக்குமாம்; -- இந்த
நீள்சுனை போல்வர் பலருண்டே? -- எனில்

\பு{[பா-ம்.] “மூழ்கியே”}

ஆரியர் செல்வம் வளர்தற்கே -- நெறி
ஆயிரம் நித்தம் புதியன -- கண்டு
வாரிப் பழம்பொருள் எற்றுவார்; -- இந்த
வண்மையும் நீயறி யாததோ?’
70