பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்

நான்காவது துகிலுரிதற் சருக்கம்

திரௌபதியை இழத்தல்

பாவியர் சபைதனிலே, -- புகழ்ப்
பாஞ்சால நாட்டினர் தவப்பயனை,
ஆவியில் இனியவளை, -- உயிர்த்
தணிசுமந் துலவிடு செய்யமுதை,
ஓவியம் நிகர்த்தவளை, -- அரு
ளொளியினைக் கற்பனைக் குயிரதனைத்
தேவியை, நிலத்திருவை, -- எங்குந்
தேடினுங் கிடைப்பருந் திரவியத்தை,
39
படிமிசை இசையுற வே -- நடை
பயின்றிடுந் தெய்விக மலர்க்கொடியைக்
கடிகமழ் மின்னுருவை, -- ஒரு
கமனியக் கனவினைக் காதலினை,
வடிவுறு பேரழகை, -- இன்ப
வளத்தினைச் சூதினில் பணயம் என்றே
கொடியவர் அவைக்களத்தில் -- அறக்
கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான்.
40

வேறு

வேள்விப் பொருளினையே -- புலை நாயின்முன்
மென்றிட வைப்பவர்போல்,
நீள்விட்டப் பொன்மாளிகை -- கட்டிப் பேயினை
நேர்ந்து குடியேற்றல் போல்,
ஆள்விற்றுப் பொன்வாங்கியே -- செய்த பூணையோர்
ஆந்தைக்குப் பூட்டுதல்போல், --
கேள்விக் கொருவரில்லை -- உயிர்த்தேவியைக்
கீழ்மக்கட் காளாக்கினான்.
41

செருப்புக்கு தோல்வேண்டியே, -- இங்குக் கொல்வரோ
செல்வக் குழந்தையினை?
விருப்புற்ற சூதினுக்கே -- ஒத்த பந்தயம்
மெய்த்தவப் பாஞ்சாலியோ?
ஒருப்பட்டுப் போனவுடன், -- கெட்ட மாமனும்
உன்னியத் தாயங்கொண்டே
இருப்பகடை போடென்றான், -- பொய்மைக் காய்களும்
இருப்பகடை போட்டவே.
42