பக்கம் எண் :

பாமாலை : பக்தி பாடல்கள்

தோத்திரப் பாடல்கள்

சக்தி


துன்ப மிலாத நிலையே சக்தி
  தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி
அன்பு கனிந்த கனிவே சக்தி
  ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி
  எண்ணத் திருக்கும் எரியே சக்தி
முன்பு நிற் கின்ற தொழிலே சக்தி
  முத்தி நிலையின் முடிவே சக்தி.
1

சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி
  சொல்லில் விளங்கும் சுடரே சக்தி
தீம்பழந் தன்னில் சுவையே சக்தி
  தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி
பாம்பை அடிக்கும் படையே சக்தி
  பாட்டினில் வந்த களியே சக்தி
சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்
  சங்கரன் அன்புத் தழலே சக்தி.
2


வாழ்வு பெருக்கும் மதியே சக்தி
  மாநிலங் காக்கும் மதியே சக்தி
தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி
  சஞ்சலம் நீக்குந் தவமே சக்தி
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி
  விண்ணை யளக்கும் விரிவே சக்தி
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி
  உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி.








3