பக்கம் எண் :

பாமாலை : பக்தி பாடல்கள்

தோத்திரப் பாடல்கள்

வையம் முழுதும்

கண்ணிகள்


வையம் முழுதும் படைத்தளிக் கின்ற
மஹாசக்தி தன்புகழ் வாழ்த்துகின்றோம்,
செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி
சேர்ந்திட நல்லருள் செய்க வென்றே.
1

பூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங் கண்ணிற்
புலப்படும் சக்தியைப் போற்றுகின்றோம்,
வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே.
2

வேகம் கவர்ச்சி முதலிய பல்வினை
மேவிடும் சக்தியை மேவுகின்றோம்,
ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை
யாங்கள் அறிந்திட வேண்டுமென்றே.
3

உயிரெனத் தோன்றி உணவுகொண் டேவளர்ந்
தோங்கிடும் சக்தியை ஓதுகின்றோம்,
பயிரினைக் காக்கும் மழையென எங்களைப்
பாலித்து நித்தம் வளர்க்கவென்றே.
4

சித்தத் திலேநின்று சேர்வ துணரும்
சிவசக்தி தன்புகழ் செப்புகின்றோம்,
இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்
எமக்குத் தெரிந்திடல் வேண்டுமென்றே.
5

மாறுத லின்றிப் பராசக்தி தன்புகழ்
வைய மிசைநித்தம் பாடுகின்றோம்,
நூறு வயது புகழுடன் வாழ்ந்துயர்,
நோக்கங்கள் பெற்றிட வேண்டுமென்றே.
6

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி என்றுரை செய்திடுவோம்;
ஓம்சக்தி என்பவர் உண்மை கண்டார் சுடர்
ஒண்மை கொண்டார், உயிர் வண்மை கொண்டார்.
7