பக்கம் எண் :

164கவிமணியின் கவிதைகள்

Untitled Document
140. சொ. முருகப்பா

1044 நாடும் நகரும் திருந்திநிதம்
     நன்மை காணும் வழிகளெலாம்
தேடி அறிந்து தளராது
     செயலிற் போற்றும் குணமுடையோன்;
பீடு பெறமா வணிகர் குலம்
     பெற்ற வீர முருகப்பன்
ஆடுந் தில்லை அம்பலவன்
     அருளால் வாழ்க வாழ்கவே!

1045 சொல்லும் சொல்லை ஐயமறச்
     சொல்லி உண்மை காத்திடுவோன்,
அல்லும் பகலும் உழைத்திடுவோன்,
     அழகார் அமரா வதிமகளிர்
இல்லம் கண்டு புகழ்கண்டோன்,
     எங்கள் நண்பன் முருகப்பன்
வெல்லும் செந்திற் பன்னிருகை
     வேலன் அருளால் வாழ்கவே!

வேறு

1046 பத்திமிகுந் தன்பர் பணிந்துநிதம் போற்று கின்ற
அத்திமுகத் தண்ணல் அருளாலே - வித்தகன்
சிந்தைக் கினியதமிழ்ச் செல்வன் முருகப்பன்
சந்ததமும் வாழ்க தழைத்து.

141. "சோம. லெ" இலக்குமணன்

1047 எல்லா நாடும் தன் நாடாய்
     எங்கும் சுற்றி ஆராய்ந்து
நல்லார் பலரின் கருத்தையெலாம்
     நாளும் தேடித் தமிழ்மக்கள்
பல்லார் அறியச் செந்தமிழில்
     பண்பாய் உரைக்கும் என்நண்பன்
சொல்லால் அமுதை வெற்றிடுவோன்
     சோம லக்கு மணன்வாழ்க!