பக்கம் எண் :

24கவிமணியின் கவிதைகள்

Untitled Document
113   உள்ளத் துள்ளது கவிதை - இன்பம்
     உருவெ டுப்பது கவிதை;
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
     தெரிந்து ரைப்பது கவிதை.

23. இலக்கிய பஞ்சகம்
114   வள்ளுவர் தந்த திருமைறையைத் - தமிழ்
     மாதின் இனிய உயிர் நிலையை
உள்ளம் தெளிவுறப் போற்றுவமே - என்றும்
     உத்தம ராகி ஒழுகுவமே.

115   பாவின் சுவைக்கடல் உண்டெழுந்து - கம்பன்
     பாரிற் பொழிந்ததீம் பாற்கடலை
நாவின் இனிக்கப் பருகுவமே - நூலின்
     நன்னயம் முற்றுந் தெளிகுவமே,

116   தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை
     தேரும் சிலப்பதி காரமதை
ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம்
     ஓதி யுணர்ந்தின் புறுவோமே.

117   கற்றவர் மெச்சும் கலித்தொகையாம் - இன்பக்
கற்பனை சேருங் களஞ்சியத்தை
முற்ற அளந்து தெரிவோமே - காதல்
மூழ்கும் துறைகண்டு வாழ்வோமே.

118   பண்டை இயற்கை வளங்களெல்லாம் - பத்துப்
     பாட்டின் வளத்தினிற் கண்டறிந்து,
மண்டல மெங்கும் கமழும் அருந்தமிழ்
     வாசம் நுகர்ந்து மகிழ்வோமே.

24. தமிழிசை

119 வெந்தழல் நீராகும்; வெள்ளெலும்பு பெண்ணாகும்;
வந்தமத வேழம் வணங்கிடுமே; - சந்தமெழப்
பாடுவார் உள்ளுருகிப் பாடும் தமிழிசைக்கு
நீடுலகில் உண்டோ நிகர்?