பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு339

Untitled Document
1599 காட்டுப் புலியின் கொடுமையஞ்சி - உங்கள்
     கால்நிழல் தங்கிய ஆடுகளை
நாட்டுப் புலியென் கொல்லுவதோ? - அந்த
     நான்மறை போற்றிய நீதிஐயா?
155
1600 மண்ணில் வளர்ந்திடும் புல்லையுண்ணும் - வான
     மாரி பொழிந்திடும் நீரையுண்ணும்;
எண்ணிநீர் செய்யும் உதவியென்னாம் - இதை
     ஏனோ உணர்ந்திலீர் மானிடரே!
156
1601 பிள்ளையைக் கொன்று கறி சமைத்தீர் - அதன்
     பெற்றோரை உண்ண அழைத்துநின்றீர்;
வள்ளலே உள்ளந் தெளிந்தவரே - இது
     வாழ்வை யளிக்கும் செயலமோ?
157
1602 மன்னுயி ரெல்லாம் உலகில் - ஒருதாயின்
     மக்களென் றுண்மை அறிந்திலீரோ?
தன்னுயிர் போற்றிப் பெரும்பழி செய்வது
     சண்டாளர் கண்ட நெறியலவோ?
158
1603 மாண்ட மனிதனோர் ஆடுமாவான் - உடல்
     மாறியோர் ஆடும் மனிதனாகும்;
நீண்ட உலகின் இயற்கைஐயா! - இது
     நீதி நூல் கண்டிடும் உண்மைஐயா!
159
1604 பாரில் உதிரம் குளிப்பதனால் - ஒரு
     பாவமும் நீங்குவ தில்லைஐயா!
சீரியதேவரும் இச்செயல் - கண்டுதம்
     சிந்தை களித்திட மாட்டாரையா!
160
1605 தாயென நம்பி வரும்உயிரை - யாக
     சாலை நடுவில் கிடத்திஒரு
பேயெனக் கீறிப் பிளப்பதனால் - என்ன
     பேறும் பெயரையும் பெற்றீரையா?
161
1606 துட்டப் பிசாசைக் குறித்திடினும் - இந்தத்
     தூண்டிலில் வந்த தகப்படுமோ?
வெட்டிக் கொலைசெய்ய வேண்டாமையா! - இதை
     விட்டொழிதல் மிக்க மேன்மைஐயா!
162