பக்கம் எண் :

ஒரு நாள் ஓடோடி வந்து
“எங்கள் கிராமத்தில்
அறுவடை ஆரம்பமாகப் போகிறது”
என்கிறாய்.

“உங்கள் வயலிலுமா?” என்று
கேட்கிறேன்.
“இல்லை; இன்னும் சிறிது காலம் ஆகும்.
எங்கள் வயலில் வளரும் பயிர்
ஆறு மாதப் பயிர்”
என்று பதிலுரைக்கிறாய்.

இன்னொரு நாள்,
குதூகலத்தைத்
தோளில் தூக்கிக் கொண்டு வந்து
“எங்கள் வயலில்
அறுவடை நடக்கப் போகிறது”
என்கிறாய்.

இதுதான் நல்ல சமயம் என்று எண்ணி
“நமது வயலில் எப்போது...”
என்று மெல்லக் கேட்கிறேன்,

“அவசரப்படாதீர்கள்...
அது ஆயிரங்காலத்துப்பயிர்”
என்று சொல்லிக்
காலைச் சிறகாக்குகிறாய்.

54