பக்கம் எண் :

அழகிப் போட்டியில்
வென்று திரும்புவதைப் போல்
என் எதிரே நின்று
“நான் எப்படி?” என்கிறாய்.

வேண்டுமென்றே
“உலகத்தில் நான் சந்தித்த
இரண்டாவது அழகி நீதான்”
என்கிறேன்.

அடுத்த வினாடியில்
ஐயமும் பொறாமையும்
கூடிப்பெற்ற கோபக் குழந்தை
உன் முகத்தில் தவழ்கிறது.
“அந்த முதல் அழகி யாரோ?”
என்று கேட்கிறாய்.

இல்லாத ஒருவனுக்கு
இருந்ததாகச் சொல்லப்படும்
நெற்றிக் கண்ணைப் போன்ற
உன் கேள்வியால் நடுங்குகிறேன்.

“வா, அவளைக் காட்டுகிறேன்”
என்று உன்னை
ஏரிப்பக்கம்
அழைத்துச் செல்கிறேன்.

அவள் அழகிய முகத்தைச்
சுட்டிக் காட்டுகிறேன்.

அவ்வளவுதான்...
அலையின் உச்சியில் துள்ளும் மீனைப்போல்

கோபத்தின் உச்சியில்
உனக்குச் சிரிப்பு வருகிறது.

உடனே ஒரு கல்லை எடுத்து
அவள் முகத்தில் வீசுகிறாய்.

பாவம்,
அவள் பயந்து மறைந்து விடுகிறாள்.
தண்ணீர் கலங்குகிறது.

65