என்னை மன்னித்துவிடு, வேதனையில் வெளிப்படுத்தும் என் சொற்கள், தேள்களாகவும் அரவங்களாகவும் தோன்றினால் என்னை மன்னித்துவிடு.
நீராடும் பொய்கை என்று நீ என்னை நம்பி வந்தபோது நான் உனக்குச் சேறாகத் தென்பட்டிருந்தால் என்னை மன்னித்துவிடு.
பிரிவின் வலிய கையில் பிடிபட்டிருக்கும் இந்த நேரத்தில் என் குற்றங்களை மறந்து கொஞ்சம் கருணை காட்டு. தூக்கில் தொங்கவிருக்கும் கைதி ஒருவனின் கடைசி ஆசையைப் பூர்த்தி செய்யும் ஒரு பழங்கால மன்னனைப் போல் நடந்துகொள்; என் இறுதி வேட்கையை நிறைவேற்று.
உன் மனத்தில் வசந்த மண்டபம் அமைக்கவந்த நான் இதோ மயான வெளியை நோக்கிப் போகிறேன்.
நீ தினமும் கண் விழித்ததும் நான் உறங்கும் மண்ணைப் பார்த்து ஒரு பெருமூச்சு விடு;
ஆண்டுக்கு ஒருமுறை நீயே நீரூற்றி வளர்க்கும் செடி கொடிகளின் சிரிப்புகளை என் சமாதியின்மேல் தூவு.., அது போதும்; அது போதும்.
81 |
|
|
|