பக்கம் எண் :

78

பிற்சேர்க்கை

மீரா நம் மீரா. . . .

கவிஞர் தமிழ்நாடன்

பக்த மீராவை பாரதத்திற்கு மறு அறிமுகம் செய்வித்தவர்  அண்ணல்
காந்தி. நம்  கவிஞர்  மீராவைத்  தமிழ்  இலக்கிய உலகிற்கு  அறிமுகம்
செய்தவர் அறிஞர்  அண்ணா. கல்லூரி  மாணவர்  மீரா  கவிஞர்  மீரா
என்று அண்ணாவின் வாய்வழி அறியப்பட்டதும், அக்கால  மேடைகளில்
சங்கப் புலவர்களோடு, புரட்சிக்கவி பாரதிதாசனோடு மீராவும் மேற்கோள்
ஆனார். மீராவின்  படைப்புப்  புதுமை  குறித்து  ஆய்வுரைகள் நிறைய
இதழ்களிலும், பல்கலைக் கழகங்களிலும், பாரதி  வழி பாரதிதாசன் போல
மீராவழி மீராதாசன் என்றொரு கவிஞர்.

மதுரைத் தியாகராசர் கல்லூரி  மாணவர் மீராவின் கனவுகளில் ஒன்று
பெங்குவின் நிறுவனம்  போலப்  புத்தகங்கள்  வெளியிடுவது.  அவரின்
இளமைக்கனவு அன்னத்தின்  வழி நனவாயிற்று. மீரா, அப்துல் ரகுமான்,
அவர்களது   அணுக்கத்    தோழர்கள்  ஆகியோரின்  கூட்டமைப்புப்
பதிப்பகம் அன்னம். பெங்குவின்  பறவையின் தமிழ் வடிவமே அன்னம்.
அன்னம் வால்மீகி காலத்திலிருந்து பாலை அருந்தித் தண்ணீரைத் தள்ளி
விடுமாம். இது சாத்தியமா, தண்ணீரே பாலாய்ப்  போன  நம் காலத்தில்.
என்றாலும் மீராவின்  அன்னம்  பால் போலும் நல்ல  கவிதை  நூல்கள்
பலவற்றை வெளியிட்டிருக்கிறது. அவற்றில் சில திரட்டுப்பால்.