பக்கம் எண் :

              ராமன் பிறந்தது அரண்மனையில்
              நன்றாய்ப் பார்த்தனர் மக்களெல்லாம்.

             
கண்ணன் பிறந்தது கடும்சிறையில்.
              கண்டவர் தாயும் தந்தையுமே.


              சூரிய குலத்தில் ராமனுமே
              தோன்றினன், பெருமை தோன்றிடவே.

             
சந்திர குலத்தில் கண்ணனுமே
              வந்தனன், பெருமை தந்திடவே.


              மனிதர் போல இவ்வுலகில்
              வாழ்ந்து காட்டினன் ராமனுமே.

             
மாயா ஜாலம் பலபுரிந்து
              வாழ்ந்தனன் நீலக் கண்ணனுமே.

              ராமன் வாழ்வைப் பின்பற்றி
              நடந்திட நம்மால் முடிந்திடுமே.

             
கண்ணன் வாழ்வும் அப்படியா?
              எண்ணிப் பார்க்கவும் முடியாதே !


              ராமன் பெற்ற குணங்களெலாம்
              நாமும் பெற்றுச் சிறந்திடுவோம்.

             
கண்ணன் கீதையில் கூறியதைக்
              கற்றே நாமும் உயர்ந்திடுவோம்.

              வாழ்ந்து காட்டிய ராமனையும்
              வழியைக் காட்டிய கண்ணனையும்

             
வாழ்வில் என்றும் மறவோமே !
              மறவோம், மறவோம், மறவோமே !

 
88