பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை100

விருந்து!
(சந்த விருத்தம்)
வினையே புரிந்து மழைநா ளறிந்து
       விரிநீர் கடந்து வருவார்;
கனியே கலந்த மொழியா லமைந்த
      கதைகா வியங்கள் நவில்வார்;
இனியே விருந்தின் சுவையே யருந்தி
      இதழே பொருந்தி மகிழ்வேன்,
தனியே பிறந்து தமிழ்போற் குளிர்ந்து
       சரியாய்த் திரண்ட நிலவே!

அறமே புரிந்த வினைவீ ரரென்னை
       அணைவார்; அணைந்து புகழ்வார்;
துறைமீ தமர்ந்து விழிவே லெறிந்து
       தொடுதோள் படிந்து மகிழ்வேன்,
பிறைமீ தெழுந்த ஒளியால் தளர்ந்து
       பெருமூச் செறிந்த நிலைபோம்!
நிறமே புரிந்து நுரைவாய் திறந்து
       நிலையாய்க் கனைக்குங் கடலே!

அணங்குகொல்
கனத்த குண்டலம் காதில் அசைந்திட,
என்னெதிர் நிற்கும் ஏந்திழை இவள்யார்?

எழுதா இயற்கை எழிலினால் என்னை
வாட்டி வருத்தும் வனிதையோ ரணங்கோ?

நிழல்வளர் சோலையில் நிற்பத னாலும்
கனிந்தமென் சாயல் காட்டுவ தாலும்
மரகதப் பச்சை மயிலோ? அதுவும்
நன்குதேர்ந் தெடுத்த நாட்டியப் பறவையோ?