பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை99

தோழி

வாய்மொழி வளர்ந்தால் தாய்மொழி வளரும்;
தாய்மொழி தேய்ந்தால்தன்மானம் தேயும்;
நோய்கொண் டாலும் கொளலாம்; மதமெனும்
பேய்கொளல் தீதெனப் பேசி விளக்கும்
சிந்தனைச் செல்வியே! செந்தமிழ் கிளியே!
இந்தப் பற்குறி எவ்வாறு வந்தது?

தலைவி

சித்திரக் கிளிக்கொரு முத்தம் கொடுத்தேன்;
பச்சைக் கிளியே, பவளவாய் இதழ்களைப்
கொழுத்துப் பழுத்த கோவைக் கனியென
எண்ணிக் கொண்டென் இதழ்களைப்
புண்ணாக்கி விட்டது பூங்கொடி வஞ்சியே

கொய்யாக்கனி 
(கும்மி)
வெள்ளிக் கிழமை பிறந்தவளாம்-அவள்
       வேலிப் பருத்தியைப் போன்றவளாம்!
பள்ளக் கடலவள் பார்வைகளாம்-புதுப்
      பங்கயப் பூக்களே செங்கைகளாம்!

பெய்யும் மழைபோற் குழிர்ந்தவளாம்- அவள்
       பிச்சை மலர்போற் சிறந்தவளாம்!
நெய்யின் நிறத்தினைப் போன்றவளாம்-அவள்
      நெற்கதிர் நாணம் உடையவளாம்!

துய்ய தமிழ்கவி செய்பவளாம்-அவள்
       தொட்டால் சுடாதவோர் செந்தணலாம்!
கொய்யும் தளிரது போன்றவளாம்- அவள்
       கொய்யாக் கனியாய் இருப்பவளாம்!