பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை12

வினைப்பயன் மெய்யுரு என்ற நான்கின்
வகையை நுணுக்கமாய் ஆராய்ந்து வந்தால்
புதிது புதிதாய் உவமைகள்
உதிக்கும் ! இதனை உணர்ந்துகொள் வீரே!

ஐம்பால்

கண்கவர் கூந்தல் கறுத்தி ருத்தல்
நெளிவோடு கருங்குழல் நீண்டி ருத்தல்
அழகொடு கூந்தல் அடர்ந்தி ருத்தல்
மென்மை கொண்டு மெத்தென் றிருத்தல்
வழிந்தோடும் வெள்ளம் வற்றி விட்டதோர்
ஆற்றின் இளமணல் அமைப்பே போலும்
படிப்படி யாகப் படிந்திருந்த லாகிய
ஐவகைப் பண்புகள் அமைந்த காரணத்தால்
அழகிய கூந்தலை ஐம்பால் என்றனர்.

கொண்டை பனிச்சை குழல்முடி சுருளெனக்
கூறும்ஐ வகையாய்க் கூந்தலை முடித்தலால்
அழகிய கூந்தலை ஐம்பால் என்றே
திரண்டநூ லறிஞர் தெரிவித் தாரெனல்
இருண்ட கூந்தலின் இயல்பறியா தாரே!

ஆராய்ச்சிமணி !

தேரில்நான் இருந்தாலும் குயில்கள் கூவும்
      சிங்காரச் சோலைதனில் உலவி னாலும்
போரில்லா இன்பநிலை காணும் அந்தப்
      புரத்தில்நான் இருந்தாலும் நாட்டு மக்கள்
நேரில்வந் தென்னிடத்தில் தங்கள் தங்கள்
      நிலைமைதனைக் கூறிடலாம்; நீதி என்னும்
வேரில்நீர் ஊற்றுவதே எனக்கு வேலை!
      வேந்தனுக்கு குடிமக்கள் குரலே வேதம்!