பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை18

காடு
(கிளிக்கண்ணி)

கார்த்திகை தீபமெனக்
      காடெலாம் பூத்திருக்கும்
பார்த்திட வேண்டுமடீ -கிளியே
      பார்வை குளிருதடீ!

காடு பொருள்கொடுக்கும்
      காய்கனி ஈன்றெடுக்கும்
கூடிக் களித்திடவே-கிளியே
      குளிர்ந்த நிழல்கொடுக்கும்.

குரங்கு குடியிருக்கும்
      கொம்பில் கனிபறிக்கும்
மரங்கள் வெயில்மறைக்கும்-கிளியே
       வழியில் தடையிருக்கும்.

மாவும் பழுத்திருக்கும்
      மலர்கள் விழித்திருக்கும்
பூவின் மதுசுரக்கும்-கிளியே
      போவா ரடிவழுக்கும்!

பச்சை மயில்நடிக்கும்
      பன்றி கிழங்கெடுக்கும்
நச்சர வங்கலங்கும்-கிளியே
      நரியெலாம் ஊளையிடும்.

கல்லுரல் போன்றமுகம்
      காட்டிடும் பன்றிகளை
மெல்லிய மான்தடுக்கும்-கிளியே
      வேங்கைகள் வால்நிமிர்க்கும்.