பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை19

அதிமது ரத்தழையை
      யானைகள் தின்றபடி
புதுநடை போடுமடீ-கிளியே
      பூங்குயில் கூவுமடீ!

காட்டின் சிறுநெருப்பு
      காந்தள் மலர்ச்சிரிப்பாம்!
நாட்டின் பெருநெருப்பு-கிளியே
      நம்பிக்கை மோசமடீ!

இலைகள் உதிர்ந்தமரம்
      ஏந்துங் கிளைகளெல்லாம்
வலைநிழல் போன்றிருக்கும்-கிளியே
      வறுமை நிலைகுறிக்கும்.

சிங்கம் புலிகரடி
      சிறுத்தை விலங்கினங்கள்
எங்கும் திரியுமடீ-கிளியே
      இயற்கை விடுதியிலே!

முல்லை
(வண்ணம்)

தான தந்தனனா - தன
தான தந்தனனா - தன
      தான தந்தன
      தான தந்தன
      தான தந்தன தந்தன தான
            தானான தானதன தானனா

மாலை அந்தியிலே - மலை
வாழும் தென்றலிலே - தெரு
      வாசல் முல்லையின்
      வாசம் வந்ததும்
      ஆசை கொண்டன வண்டுகள் யாவும்
            ஆவேச மாகமலர் ஊதவே.