பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை22

சுரந்திடும் ஊற்றுநீர் சுடுமென் றெண்ணி
விசிறுவார் உண்டோ ஓலை விசிறியால்?

அஃறினை மயிலே! ஆராய்ந்து பார்த்துச்
செய்வதைச் செய்தால் சிரிப்புக் கிடமிலை
என்பதை அறிக! என்மனங் கவர்ந்த
நாட்டியப் பறவையே நன்குநீ
ஆட்டுக தோகையே! ஆடுக நீயே!

இளவேனில்
(சிந்து)

முத்தங் கொடுப்பவளே - கொடி
      முந்தரி பூத்ததுபார்!
அத்தி மரக்கிளையின் - தளிர்
      ஆடும் அழகினைப்பார்!
குத்தும் மலையருகே - புறா
      கூவிக் குலவுதுபார்!
தொத்தும் பசுங்கிளியை - மயில்
       தூது விடுவதைப்பார்!

ஒத்த மனத்தினளே - குளிர்
      ஓடை ழுழவொலிபோல்,
சத்தங் கொடுக்குதடி - மலை
       சந்தனம் சிந்துதடி!
முத்துச் சிரிப்பழகி - மலர்
      மூச்சு மணக்குதடி.
கத்தரிக் கோடையிலே - இளங்
      கத்தரி காய்க்குதடி!

சங்கத் தமிழ்மதுரை - நகர்
      தாண்டித் தவழ்ந்துவரும்
மங்கலத் தென்றலிலே - கரு
       வண்டு மயங்குதடி!