பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை55

தனிநின்று புதுமைபல செய்யும் என்னைத்
       தக்கையென்று நினையாதீர்? என்றான் கள்வன்.

பொன்பெற்ற நிறம்பெற்ற சீதக் காதி,
      புகழ்பெற்ற புதுக்கள்வன் முகத்தை நோக்கி;
"கன்னக்கோல் கள்வன்நீ எனினும், வெல்லுங்
       கல்விக்கோல் கவிஞன்நீ! இந்த நாட்டில்
உன்னைப்போல் கற்றோரே குற்றஞ் செய்தால்,
       உணராதார் தீமைகளேன் செய்ய மாட்டார்"
இன்றைக்கு நாம்செய்யும் தீமை நம்மை
       என்றேனும் கட்டாயம் சுட்டே தீரும்!

"வியக்கின்றேன், குற்றத்தைக் குணத்தை யெல்லாம்
      வெளிப்படையாய் நீயுரைத்தாய், பாபர்போல.
"மயக்கத்தால், வறுமையினால், புவியில் வாழும்
       மாந்தரெல்லாம் குற்றங்கள் புரிவ துண்டு!
நயத்தக்க நாகரிகம் வளர வேண்டி,
       நானுன்னை மன்னித்தேன்; இனிமே லேனும்,
செய்யத்தக்க செய்திடுக; ஈங்க மர்ந்து,
       செந்தமிழ்க்குப் பெருந்தொண்டு புரிக" என்றான்.

"எண்சேர்ந்த நெஞ்சத்தான் சீதக் காதி
       இவ்வாறு கூறிடவே, அவனை நோக்கிப்
"பண்சேர்ந்த பைந்தமிழில் புலமை பெற்றோர்
       பசி தீர்த்து வருபவரே! இதுநாள் மட்டும்,
மண்சேர்ந்த குடிசையிலே வாழ்ந்த என்னை
       மதிசேர்ந்த புலவரொடு சேர்த்து வைத்தீர்!
கண்சேர்ந்த ஒளிபெற்றேன்; பெருமை பெற்றேன்;
       கனிசேர்ந்த சுவைபெற்றேன்"! என்றான் கள்வன்.