பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை85

காட்டிக் கொடுத்த கயவன் சென்றதும்
வெருகூரில் வாழ்ந்த வேசிகுப் பாச்சியை
அழைத்துவர வேந்தன் ஆட்களை அனுப்பினான்,

ஆந்திர வேந்தனின் அரண்மனைக் காவலர்
வெருகூர் நோக்கி விரைந்து சென்றனர்.

பஞ்சனைப் பறவை

வேசி குப்பாச்சி யோர்விளம்பர விளக்கு!
பாவின் இனத்தைச் சேர்ந்த பரத்தை!

ஐந்தும் ஐந்தும் ஐந்தினோ டாறெனச்
செப்பும் வயதினள்; செம்பொன் நிறத்தினள்;
பேசியே உருக்கும் பெருங்கலை வல்லி!

மதன வித்தார மாலையே அன்னவள்
புதிய கொக்கோகப் புத்தக மாகும்.

'சிலேட்டும தேகம்' அமைந்தவள் ஆதலின்
கூந்தல் நீண்ட கோதையாய் விளங்கினாள்,
காம்பவிழ்த் துதிர்த்த கனியுருக் கொண்டவள்,
குழைத்து முடியிடும் கொண்டைச் சொருக்கினால்,
இடையினால் ,நடையினால், இயந்திரப் பார்வைப்
படையினால்,கலப்படம் படிந்த சொல்லினால்,
பாதி உணர்ச்சியால்,மீதி நடத்தையால்
மாவீரன் காந்தனை மயக்கி வந்த
பஞ்சனைப் பறவை! வஞ்சக வாகனம்!
ஆந்திர வேந்தனின் அரண்மனைக் காவலர்
வெருகூர் வந்து வேசியைக் கண்டு
மன்னன் உரைத்ததை மாதுக் குரைத்தனர்.
அன்னவள் கேட்டாள்; அரண்மனைக் கெழுந்தனள்.

பொன்னிற மாலை அந்திப் பொழுதிலே
வந்து சேர்ந்தனள் வாடகைப் படகு.