பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை95

 8. அகத்துறை
பாவையைப் பார்த்தீரோ
அழகிற் சிறந்திருப்பாள் -குலமகள்
       அன்னம் எனநடப்பாள்!
தழுவுங் கொடியிடையாள்-திருவளர்
       தாமரை போன்றிருப்பாள்!
விழியில் நிலாவளர்ப்பவள்-சுரையின்
       விதையது போல்நகைப்பாள்;
மழையின் குளிரமுதை-மதுமலர்
       மங்கையைக் கண்டீரோ?

மஞ்சள் குளித்திருப்பாள்-விழிதனில்
       மையிட்டுக் கொண்டிருப்பாள்;
கொஞ்சம் மலர்பறித்தே இருள் தருங்
       கூந்தலில் சேர்த்திருப்பாள்;
நெஞ்சைக் கவர்ந்திழுக்கும்-திலகமும்
       நேரிழை வைத்திருப்பாள்;
வஞ்சி நகரென சிறந்தபெண்
       வஞ்சியைக் கண்டீரோ?

நேரிழை மார்பினிலே-மணிச்சரம்
       நீண்டு கிடந்தசையும்
ஓரிரு குண்டலங்கள்-செவிதனில்
       ஊஞ்சலைப் போலாடும்
காரிகை கற்றவளாம்-அவளிரு
       காலிற் சிலம்பிற்க்கும்
பாரியின் தேரெனவே-சிறந்தபூம்
       பாவையைப் பார்த்தீரோ?