கள்வன்? கிண்ணம் போல் காட்சிதரும் கமலப் பூவைக் கீழ்த்திசையோன் முத்தமிடும் நேரம், பாலின் வண்ணம்போல் மின்னுமுடை கழற்றி வைத்து வனப்பொய்கை குளித்தேன் நான்; ஆயர் பாடிக் கண்ணன்போல் கரையிலவன் தோன்றக் கண்டே ‘கள்வ’னெனப் பேரோசை எழுப்ப நெஞ்சில் எண்ணமிட்டேன் இமைப்பொழுதில்; ஆனால் யாரும் எடுத்தபொருள் எதுவென்றால் என்ன சொல்வேன்? கீச்சலிடும் கிளிவாய்க்குப் பலியா காமல் கிளைதொங்கும் பழங்காக்கக் கதிரோன் மேற்கில் மூச்சுவிடும் நேரத்தில் தோட்டம் சென்றேன்; முள்வேலி ஓரத்தில் ஒதுங்கி நின்றே ஆச்சரியப் பிறவியென என்னை நோக்கி அவன்மெல்ல நடைபோடக் ‘கள்வன்’ என்று கூச்சலிட நினைத்தேன் நான்; ஆனால் யாரும் கொய்தபொருள் எதுவென்றால் என்ன சொல்வேன்? |