சிறைச்சாலை விட்டுவரும் தியாகி போலச் செறிமுகிலைக் கிழித்துநிலாக் கிளம்பும் நேரம், இறைவனுக்கு விழா வெடுத்தார் ஊரார்! மேனிக்(கு) ஏற்ற உடை, தங்க நகை அணிந்து கொண்டே நிறைகூட்டம் போய்நின்றேன்; எதிரில் வந்தே நெடுங்குன்றாய் அவன் நிற்கக் ‘கள்வன்’ என்று பறைசாற்றப் பார்த்தேன் நான்; ஆனால் யாரும் பறித்தபொருள் எதுவென்றால் என்ன சொல்வேன்?
இடுகாட்டின் அமைதியிலே வையம் மூழ்கி இளைப்பாறும் - உயிர்யாவும் உறக்கங் கொள்ளும் நடுநிசியில் தூங்கிக்கொண் டிருந்த போது நலியாமல் அவன் வந்து கவிதை மேனி தொடக்கண்டேன்; கண்திறந்தேன்; கனவில் வந்தே தோன்றிப்பின் அவன்மறையக் ‘கள்வன்’ என்று கடுஞ்சத்த மிடத்துணிந்தேன்! ஆனால் யாரும் கவர்ந்த பொருள் எதுவென்றால் என்ன சொல்வேன்? ‘தமிழ்நாடு’ |