பக்கம் எண் :

76.மீரா கவிதைகள்

குறைப்பிறவி!

நித்திரை யின்றி உணவுமின்றி - மன
நிம்மதி யின்றிப் பொலிவிழந்து - துயர்ச்
சித்திரம் போலப் படுக்கையிலே - அவள்
சேர்ந்திருக்க - முகம் சோர்ந்திருக்கக் - கண்டு
பத்தரை மாற்றுப் பசும்பொன்னின் - உடல்
பற்றிய நோயினைப் போக்கிடவே - ஒரு
வைத்திய னாய்நான் பிறந்தேனா? - அவள்
வாச மலர்க்கை பிடித்தேனா?

ஆதிரை போலவே கண்ணழகும் - இடை
அசையும் அழகும் நடையழகும் - கொண்ட
மாதிடம் சென்று நெருங்கிநின்றே - ‘உன்றன்
மனத்துக் கவலை மடிந்துவிடும் - அடி
நீ, திட மாயிரு உன்கனவு - இனி
நிச்சயம் வென்றிடும்’ என்றிடவே - ஒரு
சோதிட னாய்நான் பிறந்தேனா? - அவள்
சுந்தரப் பொற்கை பிடித்தேனா?