பக்கம் எண் :

மீரா கவிதைகள்.77

விண்ணைக் கிழித்திடும் மின்னல்நிறம் - பகல்
மேக நிறம் அந்தி வானநிறம் - இரு
கண்ணைக் கவர்ந்திடும் கிள்ளை நிறம் - தேக்கு
காட்டும் நிறம்செந்நெற் காட்டுநிறம் - சோலை
வண்டு நிறம் இன்னும் என்னென்னவோ - நிறம்
வாய்த்த வளைகாட்டிப் போட்டிடவே - அவள்
வண்ணக் கரத்தைப் பிடித்தேனா? - ஒரு
வளையல் காரனாய் வந்தேனா?

என்ன பிறப்படா என்பிறப்பு! - சே! சே!
என்ன பிழைப்படா என்பிழைப்பு! - சுவைக்
கன்னற் கவிதை மொழியுடையாள் - துள்ளும்
கயலைப் பழிக்கும் விழியுடையாள் - அந்த
அன்னம் அருகினில் போயமர்ந்து - மின்னும்
அழகுக் கரம்தான் பிடித்தேனா? - தினம்
என்னை மறந்து களித்தேனா? - நான்
ஏற்ற பிறவி எடுத்தேனா?

இது நாட்டுப்பாடல் ஒன்றின் தழுவல்
‘தமிழ்நாடு’
டிசம்பர் 1963