பக்கம் எண் :

78.மீரா கவிதைகள்

பிடிக்குமா?

மான்பிடித்த மானதென்றும் முகில்கண் டாடும்
மயில்பிடித்த மானதென்றும் தொங்கும் கொம்புத்
தேன்பிடித்த மானதென்றும் விழாவில் பொங்கல்
தினம்பிடித்த மானதென்றும் கனியில் வாழை
தான் பிடித்த மானதென்றும் உயிர் இயக்கும்
தமிழ்பிடித்த மானதென்றும் சொன்னா யாமே....
மீன்பிடித்த கண்மாய்போல் ஆனேன்; காதல்
வேர்பிடித்த எனைப்பிடிக்க வில்லை யாசொல்?

யாழ்பிடித்த மாதவியின் கைப்பி டித்தே
இசைமகளை ஈன்றெடுத்த சிலம்புச் செல்வம்
ஊழ்பிடித்த தால்மாண்டான் என்னும் நூலே
உளம்பிடித்த நூலென்றும் வானம் போற்றிக்
கூழ்பிடித்த தெனமகிழ்ந்து குடித்து ழைக்கும்
குடிபிடித்த குடியென்றும் சொன்னா யாமே....
பாழ்பிடித்த அரண்மனைபோல் ஆனேன்; காதற்
பசிபிடித்த எனைப்பிடிக்க வில்லை யாசொல்?