பக்கம் எண் :

மீரா கவிதைகள்.79

விழிபிடித்த அல்லியினைத் திங்கள் தீண்டும்
விதம்பிடித்த மானதென்றும் கிள்ளை பேசும்
மொழிபிடித்த மானதென்றும் நளின மான
முயல்பிடித்த மானதென்றும் குறள்நூல் காட்டும்
வழிபிடித்த மானதென்றும் திருக்குற் றால
வளம்பிடித்த மானதென்றும் சொன்னா யாமே....
குழிபிடித்த யானையைப்போல் ஆனேன்; காதற்
குறிபிடித்த எனைப்பிடிக்க வில்லை யாசொல்?

நகைபிடித்த மானதென்றும் மழலை சிந்து
நகைபிடித்த மானதென்றும் காஞ்சிப் பட்டு
வகைபிடித்த மானதென்றும் நெய்யில் சுட்ட
வடைபிடித்த மானதென்றும் வெள்ளை முல்லை
முகைபிடித்த மானதென்றும் அந்தி மங்கை
முகம்பிடித்த மானதென்றும் சொன்னா யாமே....
புகைபிடித்த ஓவியம்போல் ஆனேன்; காதற்
புதிர்பிடித்த எனைப்பிடிக்க வில்லை யாசொல்?

தமிழ்நாடு
30-9-62