பக்கம் எண் :

80.மீரா கவிதைகள்

அங்கே.... ஆனந்தம்!

‘பாரிக்குத் தோழன் யான்’ எனப்பெருமை யோடு
பக்கத்தில் வீற்றிருந்த புகழ்க்கபிலர் உள்ளம்
பூரிக்கத் தீட்டிவைத்த பாட்டொன்றி லிருந்து
புறப்பட்டு வருவதைப் போல் வருகின்ற பெண்ணை
ஏரிக்குப் பக்கதில், ஒளியழகன் குன்றில்
இளைப்பாறும் நேரத்தில் வெகுநாளாய்க் கண்டே
மாரிக்கு முன்நெகிழும் மண்ணைப்போல் என்றன்
மனம்நெகிழ்ந்தேன்; மதுமயக்கம் கொண்டிருந்தேன்
ஓர்நாள்....

“சந்திரனைப் படைத்துப்பின் இயற்கையெனும் சிற்பி
சரியில்லை இதுவென்று விட்டெறிந்து நன்றாய்ச்
சிந்தித்து மிகமுயன்று படைத்தளித்த அழகின்
திரட்டே! நீ கிடைத்தால் நான் பணக்காரன் வீட்டுப்
பந்தியிலே இருந்துண்ண இடம் கிடைத்தால் மகிழும்
பசிகாரன் போல் மகிழ்வேன்; கிடைப்பாயா”?என்றேன்
முந்தியெழும் பெருமூச்சை உள்ளடக்கித் துன்ப
முத்திரையை வெளிக்காட்டிக்கனிஉதட்டைத்திறந்தாள்: