பக்கம் எண் :

90.மீரா கவிதைகள்

இயல்என்றும் இசைஎன்றும் எழிற்கூத் தென்றும்
இனியதமிழ் மூன்றுண்டு; விண்ணில் துள்ளும்
கயல்என்றும் புலிஎன்றும் வில்என் றும் - மண்
காத்தகொடி மூன்றுண்டு; நமக்கிப் போது
குயில்என்றும் சுடர்என்றும் குன்றன் என்றும்
குழந்தைகள் மூன்றுண்டு! மேலும் பெற்றால்
பயல்என்றும் பேய்என்றும் சனியன் என்றும்
பலபெயர்கள் இடநேரும்.... போதும்.... மேலும்..

சிறைப்பட்டுக் கிடந்தழியும் நிலைவந் தாலும்
செந்தமிழைக் கெடுக்கவரும் பகையைத் தேய்க்கப்
புறப்பட்டுக் காளையர்கள் போக, மானப்
புறப்பாட்டு - மறப்பாட்டுத் தீட்டா மல், மின்
நிறப்பட்டுச் சேலையணிந் திருக்கும் என்னை
நினைத்தபடி யேயிருந்தால் உங்கள் வேகம்
குறைப்பட்டு விடும்; அத்தான்! தமிழ்நாட் டார்பின்
கொடியவளென் றெனைத்தானே சொல்வார்,” என்றாள்.

“இந்தாபார் ஏடெடுத்தேன்; இரண்டே நாளில்
இன்னுமொரு புதுப்பரணி தீட்டிக் காட்டிச்
சிந்தாத புகழடைவேன்; இந்நூற் றாண்டின்
செயங்கொண்டான் ஆவேன்பார்! நிச்ச யம்பார்!
அந்தாதி நூலொன்றும் இயற்று வேன்நான்
அருந்தமிழ்மேல்! சரிதானே! இத்த னைக்கும்
செந்தாம ரைப்பெண்ணே! ஏதோ கொஞ்சம்
சிவந்தஇதழ் கேட்கின்றேன்; சும்மா அல்ல....