104நாமக்கல் கவிஞர் பாடல்கள்

சாதிகுலம் பிறப்புகளாற் பெருமை யில்லை;
       சமரசமாம் சன்மார்க்க உணர்ச்சி யோடே
ஓதிஉணர்ந் தொழுக்கமுள்ளோர் உயர்ந்தோர் என்னும்
       உண்மைக்கோர் இலக்கியமாய் உலகம் போற்ற
ஜோதிமிகும் கவிமழைபோல் மொழிமீ னாட்சி
       சுந்தரனாம் தன்குருவைத் தொழுது வாழ்த்தி
வேதியருள் நெறிபிசகாச் சாமி நாதன்
       விரித்துரைக்கும் சரித்திரமே விளங்கி நிற்கும்.       3

மால்கொடுத்த பிறமொழிகள் மோகத் தாலே
       மக்களெல்லாம் பெற்றவளை மறந்தார்; ஞானப்
பால்கொடுத்த தமிழ்த்தாயார் மிகவும் நொந்து
       பலமிழந்து நிலைதளர்ந்த பான்மை பார்த்துக்
கோல்கொடுத்து மீட்டுமவள் கோயில் சேர்த்துக்
       குற்றமற்ற திருப்பணிகள் பலவும் செய்து
நூல்கொடுத்த பெருமைபல தேடித் தந்த
       நோன்பிழைத்த தமிழ்த்தவசி சாமி நாதன்.       4

குறிப்புரை:-பலமிழந்து - சக்தியற்று; பிசகாமல் - தவறாமல்;
நெறி - அறவழி.

57. கலியாணசுந்தர முதலியார் வாழ்க

சலியாத சேவையும் தளராத ஊக்கமும்
       தணியாத ஆர்வ முள்ளோன்;
நலியாத சொற்களால் நவசக்தி யூட்டிடும்
       நயமிக்க தேச பக்தன்;
நிலையான கல்வியின் தெளியாத கொள்கையின்
       நேரான நெறியில் நிற்போன்;
கலியாண சுந்தரமுதலியார் தமிழன்பர்
       கண்ணான ஒருவ னாகும்.       1