59. சத்தியமூர்த்திக்கு வரவேற்பு நித்திய அறங்கள் நாட்டில் நிலைத்திட உலகம் வாழ உத்தமன் காந்தி காட்டும் ஒருவழி ஒன்றே உண்டு; சத்திய சாந்த நோன்பின் தவச்சிறை யிருந்து வந்தாய் சத்திய மூர்த்தி எங்கள் தலைவனே! வருக! ஐயா! 1 உடல்நலம் குறைந்தி ருந்தும் ஒருசிறு தயக்கமின்றிக் கடன்என ஓடி அண்ணல் காந்தியின் ஆணை தாங்கித் திடமுடன் தேச சேவை தீரர்கள் இனத்தைச் சேர்ந்தே இடரிடைக் காத்தாய் பெற்ற இந்தியத் தாயின் மானம். 2 ஏழைகள் துயரம் போக எளியவர் களைப்பு நீ்ங்கப் பாழ்பட உவகை வாட்டும் பகைமைகள் குறைய வென்றே வாழிய காந்தி சாந்த வாய்மையின் வழியில் நின்று ஊழியம் செய்யு முங்கள் உதவியை உலகம் போற்றும். 3 தீனரை வதைத்து வாட்டித் தின்றுடல் சுகித்து வாழும் மானமில் லாத வாழ்க்கை மலிந்த(து) உலகில்; மற்ற ஞானநல் வழியில் செல்ல நடத்திடும் காந்தி சாந்தச் சேனையில் சேர்ந்தபேரைச் செகமெலாம் சிறப்புச் செய்யும் 4 தஞ்சம்வந் தவரை நம்பித் தன்னர சிழந்து நொந்து பஞ்சமும் பிணியும் வாட்டப் பலதுயர் பட்டா ளேனும் எஞ்சிய ‘சாந்தி‘ ஞானம் இன்னமும் குறைவி லாத வஞ்சியாம் பார தத்தாய் வாழ்த்துவள் வாரித்தூக்கி. 5 பணத்தினை இழந்திட் டாலும் பலத்தினிற் குறைந்திட்டாலும் குணத்தினிற் குறையக் கூசும் குலத்தினிற் பிறந்தோ மன்றோ? கணத்தொடும் சிறையில் நொந்தும் கண்ணியம் குறைந்தி டாத மணத்தொடும் வருவீர் தம்மை மாநிலம் மறவா தென்றும். 6 வள்ளுவன் குறளும் வேத வடமொழி வகுத்த யாவும் தள்ளரும் ‘சாந்தி‘ என்ற தனிப்பதக் கருத்தே யாகும் கள்ளமில் லாமலெண்ணின் காந்தி சொல் அதுவே; காண்போம் எள்ளரும் அதுவே யாகும் இந்திய நாகரீகம். 7 |