புலவர் சிவ. கன்னியப்பன் 189

எச்செலவும் வருவாய்க்குள் பண்ண வேண்டும்
       எதிர்காலத் தேவைகளை எண்ண வேண்டும்
மிச்சமென்று சிறிதேனும் சேர்த்து வைத்தால்
       மீறிஒரு துன்பம்வரின் தீர்த்து வைக்கும்.8

கடமைகளைத் தயங்காமல் புரிய வேண்டும்
       கடமையின்றி உரிமையில்லை தெரிய வேண்டும்
உடைமைகளைப் பெருக்க வென்றும் அலைய வேண்டாம்
       உள்ளத்தின் அமைதிகெட்டுக் குலைய வேண்டாம்.9

செல்வத்தில் பெருகிவிட்டால் செருக்கவேண்டாம்
       சேர்ந்தவரை எளியரென்று வெறுக்க வேண்டாம்
எல்லைக்குள் ஏழைகளுக் குதவி செய்தல்
       என்பதுதான் ஆறறிவின் பதவி எய்தல்.10

137. மாணவனுக்கு

கல்விபெறும் மாணவனாம் பருவம் கண்டீர்
       கவலையற்ற களிசிறந்த கால மாகும்;
தொல்லைமிக்க உலகநடைச் சுழலில் நேரும்
       துன்பங்கள் துயரங்கள் தோன்றாக் காலம்;
எல்லையற்ற ஆர்வமுள்ள இக்கா லந்தான்
       எக்கலையும் பயில்வதற்கும் ஏற்ற காலம்
நல்வழியில் பயன்படுத்தும் மாண வர்க்கே
       நாமகளின் திருவருளின் நலங்கள் கூடும்.       1

ஆசானைத் தந்தையென வணங்க வேண்டும்
       அவர்சொல்லும் அறிவுரைக்கும் இணங்க வேண்டும்
கூசாமல் தன்கருத்தைக் கூற வேண்டும்
       குற்றமுண்டேல் ஒப்பிமனம் மாற வேண்டும்
மாசான வார்த்தையெதும் ஆசான் மாட்டு
       மறந்தேனும் ஒருபோதும் பேசான் என்ற
ஆசாரம் உள்ளவனே நல்ல சீடன்
       அறனறிந்த நல்வாழ்விற்(கு) அருக னாவான்.       2